ஞாயிறு, 12 நவம்பர், 2017

தன்முனைக் கவிதைகள் -தமிழில் முதன் முதலில் புது வரவு

தன்முனைக் கவிதைகள் தமிழில் புது வரவு –வடிவமைப்பு – கா.ந.கல்யாணசுந்தரம் 
********************************************************************************************************************

.

·       # மை ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன் 


·        #குளத்தில் வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது

·        #முன்பின் தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்

·        #தேனிர் கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி

·        #உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

#மெல்ல வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி மேலெழும்ப
வந்தமரும் பட்டாம்பூச்சி

·        #எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்
ஒரு ரசிகை

·        #தூரத்தில் இணையும்
இருப்புப்பாதைகள் அருகில்
அமர்ந்தும் உறவை வெறுக்கும்
மனக் காயங்கள்

·        #நூல்கண்டு குறைந்துகொண்டே
வந்தாலும் பறந்தபடி
உயரும் பட்டத்தில்
தெளிவாய் எனது வருங்காலம்

·        #எனக்குள் யாசிக்கும்
வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில்
முனைப்புடன் நிற்கின்றன
சமுதாய நிகழ்வுகள்  


.........கா.ந.கல்யாணசுந்தரம் 


சனி, 23 செப்டம்பர், 2017

தமிழ் வணக்கம்




தமிழ் வணக்கம் 
*************
எங்கும் தமிழே முழங்கக் கேட்போம் 
எதிலும் தமிழே வழங்கக் கேட்போம் 
பொங்கும் தமிழின் இலக்கியச் சுவையை 
பூமியின் மீது உலவ விடுவோம் 
கங்கை தவழும் இமயம் கடந்து 
கன்னித்தமிழைக் கொண்டுசெல்வோம் 
திங்கள் செல்லும் விண்வெளிப் பாதையில் 
மங்காத தமிழொளி சிந்திடக் காண்போம் 

.......கா.ந.கல்யாணசுந்தரம்